திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்த வேலு (34) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் 12 மற்றும் எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக வேலுவின் மனைவி தன்னுடைய கணவரை பிரிந்து இளைய மகளை அழைத்து தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 12 வயதான மூத்த மகள் அவருடைய தந்தை பராமரிப்பில் இருந்துள்ளார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான வேலு அடிக்கடி தன்னுடைய மகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தந்தையின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மகளை அழைத்துக்கொண்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நிகழ்ச்சிக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்திலையே தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பார்த்த சக பயணிகள் வேலுவை அடித்து நடுவழியில் இறக்கி விட்டன. பிறகு அந்த சிறுமியை உறவினரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தபோது சேலத்தில் உள்ள முகவரி சிறுமிக்கு தெரியாததால் அங்குள்ள கிறிஸ்துவ சபையின் காப்பகத்தில் ஒப்படைத்துச் சென்றனர்.
அங்கிருந்த நிர்வாகி சிறுமியிடம் விசாரித்த போது தந்தையின் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிறுமி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வேலுவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது அவர் மீது போக்சோ வழக்கு கைது செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
