தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார்.
இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் பொதுவெளியில் கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஜி கே மணிக்கு அன்புமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பது போல் அமையும். இல்லையென்றால் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது போல ஜிகே மணி பாமகவில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
