தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடைந்தன. மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாகப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முன் அரசின் முறையான ஒப்புதலைப் பெற வேண்டும். தற்போது புதிய அரசு அமையவுள்ள நிலையில், அமைச்சரவை பதவியேற்ற பிறகு அரசின் ஒப்புதலைப் பெற்று புதிய தேதியில் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதனால் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் 8 லட்சம் மாணவர்களும் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
