மும்பை புறநகர் ரயில்கள் அதன் நெரிசலான பயணங்கள் மற்றும் திரைப்படப் பாடல்களுக்காகப் பெயர்பெற்றவை. ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள ஒரு புதிய வகை ரயில் பயணிகளிடையே பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் முதல் ‘குளிரூட்டப்படாத தானியங்கி கதவுகள் கொண்ட ரயில்’ என்ற அடையாளத்துடன் வந்துள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்காக சறுக்கும் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஏசி வசதி இல்லாதது மும்பை போன்ற வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க நகரத்திற்குப் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பியூஷ் ராய் என்பவர் பகிர்ந்துள்ள இந்த ரயிலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயிலின் கதவுகள் வலைகளால் மூடப்பட்டு, கூரையில் மட்டும் காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் நெரிசலில் இந்தக் காற்றோட்டம் போதுமானதாக இருக்காது என்றும், ரயில் ஒரு ‘உலை’ (Furnace) போல மாறிவிடும் என்றும் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, முறையான பராமரிப்பு இல்லாதபட்சத்தில் இந்தத் திட்டம் தோல்வியடைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பயனர் இதை “மும்பை லோக்கல் அல்ல, மும்பை தந்தூர்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நெரிசலில் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பலரும் அச்சப்படுகின்றனர். விபத்துகளைத் தடுக்க அரசு இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மும்பையின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பயணிகளின் சௌகரியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
