சிவகங்கை காமராஜர் நகர் பகுதியில் உள்ள கௌரி பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, அங்குள்ள சுமார் 51 வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மக்கள், அறநிலையத்துறை அலுவலர் ஒருவரைத் தாக்கி அங்கிருந்து துரத்தியடித்ததால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்த அதிகாரிகளைப் பாதுகாப்பாக மீட்டனர்.
நில அபகரிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமான தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
