சமீபத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் சிலர் சேர்ந்து பாட்டுப் பாடி, கைதட்டி ‘மகிளா சங்கீத்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்தப் பெண்கள், தங்களின் பயணத்தை உல்லாசமாகக் கழிப்பதற்காகப் பொது இடம் என்பதை மறந்து, சக பயணிகளைக் கவனத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெண்களின் இந்தத் தொடர்ச்சியான பாடல்களாலும், சத்தத்தாலும் அந்த ரயில் பெட்டியில் பயணித்த மற்ற பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதைக் கவனித்த ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் அங்கு வந்து, மிகவும் அமைதியான முறையில் அந்தப் பெண்களிடம் நிலைமையை எடுத்துக் கூறினார். ரயில் என்பது அனைவரும் பகிரும் ஒரு பொதுவான இடம் என்றும், மற்றவர்களின் பயணத்திற்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அமைதி காக்கும்படியும் அவர் அந்தப் பெண்களை அறிவுறுத்தி, அவர்களின் பாட்டுக் கச்சேரியை நிறுத்த வைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்தப் பெண்களின் செயலை விமர்சித்து, பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் பலருக்குப் புரிவதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், எந்தவிதமான வாக்குவாதமும் இன்றி மிகவும் பொறுமையாகவும், கண்ணியமாகவும் நிலைமையைக் கையாண்ட அந்த ரயில்வே அதிகாரியின் செயலுக்கு இணையவாசிகள் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
