நேபாளத்தின் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அந்நாட்டின் மூன்று மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆபத்து இன்னும் தணியவில்லை என சீன நீர்வள அமைச்சகம் எச்சரித்துள்ளது. நேபாளத்தில் சோசென் கோலா மற்றும் புர்பு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்ட பெரிய தடுப்பு ஏரி ஒன்று உருவாகி நிரம்பி வழிகிறது. அடுத்த சில நாட்களில் கூடுதலாக 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் பாயக்கூடும் என்பதால், இந்த ஏரி உடைந்து மேலும் பெரும் பேரழிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆகஸ்ட் 26 அன்று, லெண்டே ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையையும் வெள்ளத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறப்பு ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். வெளியுறவு அமைச்சகக் குழுவினர் மற்றும் காத்மாண்டு, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், நிலவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களைச் சேகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, வெளியுறவு அமைச்சகம் பல்வேறு மாநில அரசுகள், சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. நேபாள அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர் தொடர்பில் இருந்து வருகிறது. சேலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள இந்தியர்களைக் கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்டை நாட்டிற்கு உதவும் வகையில் இந்தியா தனது மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. முதற்கட்டமாக புதன்கிழமை அன்று 10 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களைக் கொண்ட இரண்டாவது தொகுப்பை இந்தியா நேபாளத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
