“தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே”…. பேரவையில் அமைச்சர் பாடிய பாட்டு…. எதிர்த்து சீறிய கே.என். நேரு… செங்கோட்டையன் கொடுத்த திடீர் விளக்கம்…!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மக்கள் நலன் மற்றும் அரசியல் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களுக்கிடையே கடுமையான காரசார விவாதங்கள் அவ்வப்போது எழுவது வழக்கம். அந்த வகையில், பேரவை விவாதத்தின்போது அமைச்சர் சம்பத்குமார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “தம்பி… நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…” என்ற பாடலின் வரிகளைக் குறிப்பிட்டுப் பாடினார். “தெரு தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு; ஊரார் தெரிந்துகொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு… மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என அவர் பாடிய வரிகள், ஆளும்கட்சியினரை நேரடியாகத் தாக்குவது போல் அமைந்ததால் பேரவையில் திடீர் சலசலப்பும் திமுக உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பும் உருவானது.

இந்த காரசாரமானச் சூழலைத் தணிக்க முற்பட்ட அமைச்சர் செங்கோட்டையன், “அமைச்சர் எம்.ஜி.ஆரின் திரைப்பாடலை மட்டுமே மேற்கோள்காட்டிப் பாடினாரே தவிர, இதை அரசியல் குற்றமாகவோ அல்லது தவறாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறி நியாயப்படுத்தினார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு உடனடியாகக் குறுக்கிட்டு, “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கும், அமைச்சர் இங்கே பாடிய பாடலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, ‘தம் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்’ என்ற வரிகள் குடும்ப அரசியலையும் சுயநலத்தையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்ததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.