தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அங்குள்ள ஒரு வயது குழந்தையின் பெற்றோருக்கு 3 முட்டைகள் வழங்கப்பட்டன.
அந்த முட்டைகளில் ஒன்றை குழந்தையின் பெற்றோர் வீட்டில் வேகவைத்து உடைத்துப் பார்த்தபோது, அதனுள் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்த நிலையில், அதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அந்த முட்டையின் ஓடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அரசு சார்பில் வழங்கப்பட்டவையா அல்லது வெளியில் வாங்கப்பட்டவையா என ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
