1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் செயலிழந்து திடீரென விபத்துக்குள்ளானது. கடலில் விழுந்து மூழ்கிய இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 52 பேர் உயிரிழந்தனர்.
விமானம் கடலில் மூழ்கியபோது உயிர்காப்பு சாதனங்களின் உதவியுடன் 17 பேர் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், உயிரிழந்த 52 பேரில் 13 பேரின் உடல்கள் மட்டுமே அப்போது மீட்கப்பட்டன. கடலின் அதிக ஆழம் காரணமாக எஞ்சிய உடல்களையோ அல்லது விமானத்தின் சிதைவுகளையோ கண்டுபிடிக்க முடியாமல் இந்த விபத்து 74 ஆண்டுகளாகப் பெருமர்மமாகவே நீடித்து வந்தது.
தற்போது, அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் சுமார் 2,000 அடி ஆழத்தில் இந்த விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 74 ஆண்டுகளாக நீடித்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமான விபத்தின் மர்மம் அவிழ்ந்துள்ளது.
