தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர், கதாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பஞ்சு அருணாசலம். 80 களில் ரஜினி கமல் ஆகியோரின் கமர்ஷியல் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தவர் பஞ்சு அருணாசலம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பஞ்சு அருணாசலம் சினிமாவில் கண்ணதாசனின் உதவியாளராக அறிமுகமாமி படிப்படியாக வளர்ந்தவர். அப்போதுதான் 1965 ஆம் ஆண்டு உருவான கலங்கரை விளக்கம் என்ற படத்துக்கு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கலாம் என எம் ஜி ஆர் சொல்லியுள்ளார். ஆனால் தன் சித்தப்பாவான கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் பிரச்சனை இருக்கும் போது எப்படி நாம் அவர் படத்துக்கு பாடல் எழுதுவது என அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் பஞ்சு அருணாசலம்.
இதையறிந்த கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்திடம்” ஏன்டா எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான பிரச்சனை அதுல உனக்கு என்ன? அவர் படத்துக்கு பாடல் எழுதுவது எவ்வளவு நல்ல வாய்ப்பு தெரியுமா? நல்ல பேரு கிடைக்கும் போய் எழுதிட்டு வா” என சொல்லி அனுப்பியுள்ளார். அப்படி பஞ்சு எழுதிய பாடல்கள்தான் என்னை மறந்ததேன் மற்றும் பொன்னொழில் பூத்தது ஆகிய பாடல்கள்.

ஆனாலும் அவர் தொடர்ந்து பாடல்கள் எழுதவில்லை. ஆங்காங்கே சில பாடல்கள் எழுதி வந்தார். சாரதா படத்தின் அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். கண்ணதாசன் ஊரில் இல்லாத போது திடீரென ஒரு பாட்டு வேண்டும் எனப் படக்குழு முடிவு செய்ய அந்த பாடலை பஞ்சு அருணாசலமே எழுதட்டும் என சொல்லியுள்ளார்.
அப்படி அவர் எழுதிய பாடல்தான் இப்போது வரை திருமண வீடுகளில் ஒலிக்கப்படும் ‘மணமகளே மருமகளே வா’ பாடல். ஆனால் இப்பொது வரைப் பலரும் அந்த பாடல் கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
