சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அன்றே சாதனை படைத்த இப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சமீபத்தில் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதியை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ரீ-ரிலீஸிலும் ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்தப் படம் தற்போதும் மிகப்பெரிய வசூலை ஈட்டியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், ஏற்கனவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோரை நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக, படையப்பா படத்தின் தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஆகிய படங்களில் ரஜினிகாந்த் பிஸியாக நடித்து வரும் நிலையிலும், தனது பழைய வெற்றிப் படக் கூட்டாளிகளை மறக்காமல் பாராட்டியுள்ளது திரைத்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
