மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பபானிபூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியினர் கள்ள வாக்குகள் போடுவதற்காக ‘செயற்கை விரல்களை’ (Artificial Fingers) வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பபானிபூர் தொகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுமார் 700-க்கும் மேற்பட்ட செயற்கை விரல்களைச் சட்டவிரோதமாக வரவழைத்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒருமுறை வாக்களித்தவர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை அடையாளத்தை மறைத்துவிட்டு, மீண்டும் அதே நபர் கள்ள வாக்கு போடுவதற்காக இந்தச் செயற்கை விரல்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சுவேந்து அதிகாரி விவரித்துள்ளார். இது தொடர்பாக அவர் சில ‘மாதிரி’ பொருட்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது போன்ற செயல்கள் ஒரு ஜனநாயக நாட்டில் சாத்தியமற்றது என்றும், தேர்தல் தோல்வி பயத்தால் சுவேந்து அதிகாரி இது போன்ற ஆதாரமற்ற மற்றும் வினோதமான புகார்களைக் கூறி வருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அருப் சக்ரவர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி நேரடியாகப் போட்டியிடும் நிலையில், இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
