“ஆபாசம் கூடாது” ‘கரகாட்டக்காரன்’ பட பாணியில் ஆடை அணிய வேண்டும்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், கரகாட்டம் என்ற பெயரில் உண்மையில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளே நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரகாட்டத்தின் புனிதத்தையும் அதன் பாரம்பரிய மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் நீதிபதி சில முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

கரகாட்டம் என்பது தமிழகத்தின் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய, மழைக் கடவுளான மாரியம்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒரு புனிதமான நாட்டுப்புறக் கலை வடிவம் என்று நீதிபதி குறிப்பிட்டார். தலையில் பானைகள் அல்லது குடங்களை வைத்துச் சமநிலை குலையாமல் ஆடுவது, கலைஞர்களின் அபாரமான திறமையையும் கவனக் குவிப்பையும் காட்டுவதாகும். வண்ணமயமான ஆடைகள் மற்றும் நேர்த்தியான உடல் அசைவுகளுடன் நிகழ்த்தப்படும் இந்த நடனம், வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் கடவுள் மீதான பக்தியை வெளிப்படுத்தும் ஒரு கலை என்று அவர் விவரித்தார்.

   

இறுதியாக, கரகாட்டம் அதன் பாரம்பரியமான ஆடும் முறையிலோ அல்லது உடை அணியும் முறையிலோ எவ்விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்ற முறையான மற்றும் கண்ணியமான ஆடைகளையே கலைஞர்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிபந்தனைகளுடன், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஒரு நாள் மட்டும் கரகாட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு போலீசாருக்கு நீதிபதி ஆணையிட்டார்.