2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைத்துக் கொண்டுள்ளார். சென்னையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்த பின், அமமுக அதிகாரப்பூர்வமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) தங்களது கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டார். “அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.கடந்த காலக் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, ஆளுங்கட்சியான திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தினகரன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஓ. பன்னீர்செல்வம் தனது கூட்டணி குறித்த முடிவைத் தை மாதம் முடிவதற்குள் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
