பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக மற்றும் அமமுக இடையிலான இணைப்பு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சாத்தியமானது என்பதை உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி முன்னின்று அறிவுறுத்தியதோடு, எடப்பாடி பழனிசாமி (EPS) அதற்குச் சம்மதம் தெரிவித்த பின்னரே முறைப்படி பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் தெரிவித்தார். தங்களுக்குள் இருந்தது ஒரு “கூட்டு குடும்பப் பிரச்சனை” என்றும், பார்த்த மாத்திரத்திலேயே மனஸ்தாபங்கள் மறைந்து அண்ணன் – தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டணியில் இணைய எந்தவிதமான அச்சுறுத்தலோ அல்லது அழுத்தமோ காரணமல்ல என்று விளக்கமளித்த தினகரன், 2021-லேயே நடக்க வேண்டிய இந்த இணைப்பு தற்போது கைகூடியுள்ளதாகக் கூறினார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், “திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே எங்களின் இலக்கு; தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றித் தரும்” எனத் தேர்தல் வெற்றிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
