தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. திமுக கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் அதிமுகவின் நிலை அப்படி கிடையாது. பாஜக உடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்காததால் தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர்.
அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் பதவி நீக்கம் தான். ஏற்கனவே இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தாலும் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என எடப்பாடிக்கு அவர் கெடு விதித்திருந்தார். உடனே அவருடைய கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் கட்சியின் விதிகளுக்கு மாறாக செயல்பட்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்ததால் மொத்தமாக கட்சியிலிருந்து செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்தார். இது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே தஞ்சை அல்லது மதுரையில் நடைபெற உள்ள பாஜகவின் பொங்கல் விழாவில் NDA கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடு பாஜக மற்றும் அதிமுக முக்கிய தலைவர்கள் மாறி மாறி டெல்லி மேலிடத்தை சந்தித்து வருகின்றனர். NDA கூட்டணியில் தற்போது அதிமுக, பாஜக, தமாகா, புதிய நீதி கட்சி, ஐஜேகே ஆகியவை உள்ளன. மேலும் பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் அணியை விரைவாக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஓபிஎஸ் சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்த நிலையில் அவர் விரைவில் மீண்டும் கூட்டணியில் இணைவார் என தெரிகிறது.
