தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்விதக் கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக தவெக தலைவரை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகப் பரவிய தகவல்களை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை என்றும், தற்போது அனைத்துத் தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களைக் கண்டறியும் பணிகளில் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தவெக-வின் இந்த அதிரடி முடிவின் மூலம், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தவெக என ஒரு வலுவான நான்கு முனைப் போட்டி உருவாவது இப்போது உறுதியாகியுள்ளது.
