இமாச்சலப் பிரதேச மாநிலம் சாம்பா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிகிக்கொண்ட பைக் ஓட்டுநர் ஒருவரைப் புதுமணப் பெண் ஒருவர் தனது துப்பட்டாவைப் பயன்படுத்திச் சாதுர்யமாக மீட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தின் அதிவேக நீரோட்டத்தில் நிலைதடுமாறி பைக் ஓட்டுநர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாகக் காரில் வந்த ஒரு குடும்பத்தினர் நிலமையைக் கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்தனர். காரில் இருந்த நபர் வெள்ளத்தில் இறங்கி உதவ முயன்றபோதும் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் நெருங்க முடியவில்லை.
அப்போது காரில் இருந்த புதுமணப் பெண், சிறிதும் யோசிக்காமல் தனது துப்பட்டாவை நீட்டி ஓட்டுநரைப் பிடிக்குமாறு கூறியுள்ளார். அந்தத் துப்பட்டாவைப் பலமாகப் பிடித்துக்கொண்ட ஓட்டுநரை, காரில் வந்த நபரும் சேர்ந்து பாதுகாப்பாகக் கரையேற்றினர். புதுமணப் பெண்ணின் இந்த தைரியமான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
