காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மஞ்சுநாதன் – அமிர்தலட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஜீவலட்சுமி (18). நர்சிங் படித்து வந்த இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜீவலட்சுமியின் தாயார் அமிர்தலட்சுமியும், ஜீவானந்தத்தின் தாயார் கங்காவும் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த நிலையில், ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் வேறு சமூகமாக இருந்தாலும் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி மதியம் ஜீவலட்சுமி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு மாமியார் கங்கா தகவல் கொடுத்துள்ளார். பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜீவலட்சுமியின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது கழுத்தில் தூக்கு மாட்டியதற்கான தழும்புகளும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் இருந்ததை அவர்கள் கவனித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் விசாரித்தபோது, ஜீவலட்சுமியை அடித்து துன்புறுத்தி, தூக்கிலிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புதுப்பெண்ணின் தாயார் அமிர்தலட்சுமி தூசி காவல் நிலையத்தில் அன்றிரவே புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருமணமான சில நாட்களிலேயே தனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டும், பெற்றோர் வீட்டை எழுதி வாங்கி வருமாறு கூறியும் கணவர் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதுடன், தங்களின் மகள் இறப்புக்குக் காரணமான மருமகன் ஜீவானந்தம், அவரது தம்பி தனுஷ், மாமியார் கங்கா மற்றும் கங்காவின் சகோதரி, அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து ஜீவலட்சுமியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
புகாரைத் தொடர்ந்து, ஜீவலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றிய தூசி போலீசார், பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின் மருத்துவமனைக்கு வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றவாளிகள் 5 பேரையும் உடனடியாகக் கைது செய்யக்கோரி அவரது ஜீப்பை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த டி.எஸ்.பி மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் அவர்களைத் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியாக, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
