சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவும் கடுமையான இடநெருக்கடி காரணமாக, புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு முதலமைச்சர் அறை மாற்றப்பட்ட போதிலும், பொதுமக்களின் வருகை அதிகரிப்பால் இடநெருக்கடி தொடர்கிறது. தவிர, புனித ஜார்ஜ் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு கூடுதல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இதன் காரணமாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள சுமார் 17 ஏக்கர் அரசு நிலம் புதிய தலைமைச் செயலகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும் என அரசால் கருதப்படுகிறது. இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதன் மூலம், அரசின் அனைத்துத் துறைகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்க முடியும். அண்மையில் அரசுப் பொறியாளர்கள் இந்த நிலத்தில் முதற்கட்ட ஆய்வுகளை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்பகுதி முதலமைச்சரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி தமிழக அரசியலில் புதிய ஒன்றல்ல. முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், பின்னர் வந்த ஜெயலலிதா அரசால் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதேபோல், ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் ஜெயலலிதாவின் திட்டமும் கடும் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது.
முன்னதாக, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே பட்டினம்பாக்கம் சிக்னல் அருகிலுள்ள இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட ஆலோசித்தனர். எனினும், கடலோரப் பகுதி என்பதால் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் ஆபத்துகள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்புக் காரணமாக அத்திட்டம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அதே பட்டினம்பாக்கம் பகுதியை மையமாக வைத்து புதிய தலைமைச் செயலகக் கனவை முதலமைச்சர் விஜய் மீண்டும் கையில் எடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…