“பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம்”…. கருணாநிதி, ஜெயலலிதாவால் முடியாததை செய்யப்போகும் முதல்வர் விஜய்?… பின்னணியில் பரபரப்பு உண்மை….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவும் கடுமையான இடநெருக்கடி காரணமாக, புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு முதலமைச்சர் அறை மாற்றப்பட்ட போதிலும், பொதுமக்களின் வருகை அதிகரிப்பால் இடநெருக்கடி தொடர்கிறது. தவிர, புனித ஜார்ஜ் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு கூடுதல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இதன் காரணமாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள சுமார் 17 ஏக்கர் அரசு நிலம் புதிய தலைமைச் செயலகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும் என அரசால் கருதப்படுகிறது. இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதன் மூலம், அரசின் அனைத்துத் துறைகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்க முடியும். அண்மையில் அரசுப் பொறியாளர்கள் இந்த நிலத்தில் முதற்கட்ட ஆய்வுகளை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்பகுதி முதலமைச்சரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

சென்னை தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி தமிழக அரசியலில் புதிய ஒன்றல்ல. முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், பின்னர் வந்த ஜெயலலிதா அரசால் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதேபோல், ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் ஜெயலலிதாவின் திட்டமும் கடும் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது.

   

முன்னதாக, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே பட்டினம்பாக்கம் சிக்னல் அருகிலுள்ள இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட ஆலோசித்தனர். எனினும், கடலோரப் பகுதி என்பதால் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் ஆபத்துகள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்புக் காரணமாக அத்திட்டம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அதே பட்டினம்பாக்கம் பகுதியை மையமாக வைத்து புதிய தலைமைச் செயலகக் கனவை முதலமைச்சர் விஜய் மீண்டும் கையில் எடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.