தமிழக அரசியலிலும் திரையுலகிலும் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று நயீம் மூசா. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் நிழல் போலத் தொடரும் இவர், சாதாரணப் பாதுகாவலர் அல்ல; ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய சர்வதேச அனுபவம் கொண்டவர். கேரளாவின் மாஹே பகுதியைச் சேர்ந்த நயீம், துபாயில் தனது ‘ஜென்டூர் செக்யூரிட்டி’ (Gentur Security LLC) நிறுவனத்தின் மூலம் டோம் குரூஸ், சல்மான் கான் மற்றும் ஃபார்முலா 1 ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர் போன்ற ஆளுமைகளுக்குப் பாதுகாப்பு அளித்து உலகத்தரம் வாய்ந்த ஒரு பாதுகாப்பு நிபுணராக உருவெடுத்துள்ளார்.
விஜய்யுடன் நயீம் மூசாவின் பயணம் தவெக கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே, குறிப்பாகக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிலிருந்து தொடங்கியது. பிரச்சாரங்களின் போது தொண்டர்கள் வீசிய குளிர்பான பாட்டில் மற்றும் மாலைகளை விஜய் லாவகமாகப் பிடித்தபோது, ஒரு நொடியும் பிசகாமல் அவருடன் நின்ற மூசாவின் விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலானது. “ஆயுதங்களால் அல்ல, வெளிப்படைத்தன்மையாலும் நட்புறவாலுமே குற்றங்களைத் தடுக்க முடியும்” என்ற கொள்கையைக் கொண்ட இவர், வெறும் பாதுகாவலராக மட்டுமின்றி, ஒரு விழாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டமிடலையும் (Logistics) கச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவர்.
நயீம் மூசாவின் பாதுகாப்பு வளையம் என்பது 360 டிகிரி கோணத்தில் அமையக்கூடியது. சமீபத்தில் விஜய் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவருக்கு இணையாக ஓடி வந்த நயீமின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் மூசாவின் நிறுவனத்தையே நாடுகின்றனர். இந்தியா மட்டுமின்றி கத்தார், ஓமன், சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள இவரது நிறுவனம், துபாய் போலீஸாராலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்னணி நிறுவனமாகும்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விஜய் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி (கிழக்கு) தொகுதிகளில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடும் அரசியல் களத்தில் விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்வது நயீம் மூசா தலைமையிலான குழுதான். விஜய்க்கு அரசு வழங்கும் பாதுகாப்பையும் தாண்டி, ஒரு நிழலைப் போல அவரைத் தொடர்ந்து வரும் நயீம் மூசா, இன்று தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் “நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக” நீங்கா இடம் பிடித்துள்ளார்.
