சினிமாவில் பல பிரபலங்கள் வருவதும் உடனே கலை உலகத்திலிருந்து விலகுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் பாடகர்களை பொருத்தவரை அவர்கள் குரல் மங்காதவரை சினிமாவில் ஜொலித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி ஒரு காலத்தில் ரெக்கை கட்டி பறந்தவர் தான் பாடகி ஜென்சி. தன்னுடைய காந்த குரலால் ஒட்டுமொத்த சினிமாவையும் பணிய வைத்தவர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவர் சிறுவயது முதலே மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

ஒருமுறை இயேசுதாஸ் உடன் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் மேடையில் அவருக்கு இணையாக பாடியதால் ஜென்சி மீது கலை உலகத்தின் கண் பட்டது. அப்போதுதான் அவரை அங்கிருந்து அழைத்து வந்து இளையராஜாவுக்கு ஏசுதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். உடனே இளையராஜா ஜென்சிக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் முதலில் திரிபுரசுந்தரி படத்திற்கு பாடல் பாடினார். ஆனால் அந்தப் பாடல் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. அதன் பிறகு அவர் பாடிய என்னுயிர் நீதானே பாடல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டது.

தொடர்ந்து என் வானிலே மற்றும் காதல் ஓவியம் போன்ற காலம் காலமாக ரசிக்கப்படும் பாடல்களை ஜென்ஸி பாடினார். தொடர்ந்து இளையராஜா வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க ஜென்சி முன்னணி பாடகியாக கொடிகட்டி பறந்தார். பெண் பாடகிகளில் காந்தக் குரல் கொண்ட பாடகி என்று அனைவராலும் கொண்டாடப்பட்டார். இப்படி முன்னணி பாடகியாக இருந்த இவருக்கு திடீரென பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் வாய்ப்பு கிடைக்காததால் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது அவர் மொத்தமாக கேரளாவில் தான் செட்டில் ஆகிவிட்டார்.
