‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’… 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை…. திடுக்கிடும் உண்மை….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

மும்பையில் முதுகலை பல் மருத்துவ (MDS) மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தோப் ஹில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுதி சோனாவனே, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுதி சோனாவனே ஆறு பக்கங்கள் கொண்ட தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதில், தனது காதலன் தனக்குத் தொடர்ந்து மன ரீதியான துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் ஏற்படுத்தியதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இருவரும், ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாகப் பிரிந்ததாகத் தெரிகிறது.

   

பிரிவிற்குப் பிறகும், சுதியின் வாழ்க்கையில் மற்றொரு நபர் நுழைந்ததால் ஆத்திரமடைந்த அவரது முன்னாள் காதலன் ஃபசல் முகமது கான் (31), அவரைத் தரக்குறைவாகப் பேசி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் மன உளைச்சலும், அவமானமும் தான் மாணவியின் தீவிர முடிவுக்குக் காரணமாக அமைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில், சுதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

   

இதனைத் தொடர்ந்து, லோயர் பரேல் பகுதியில் காப்பீட்டு முகவராகப் பணியாற்றி வந்த ஃபசல் முகமது கானை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவி ஒருவர் காதல் விவகாரத்தால் உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.