தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.
ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ராமமூர்த்தியோடுதான் இணைந்து பணியாற்றினார். இருவரும் பணம் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இந்த வெற்றிக்கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து பணியாற்றியது. விஸ்வநாதனை விட ராமமூர்த்தி மூத்தவர் என்றாலும் அந்த கூட்டணி ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’ என்றே அழைக்கப்பட்டது. இருவரும் ஈகோ இல்லாமல் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்கள்.
இதில் விஸ்வநாதன் மெட்டமைப்பது பாடலைக் கேட்டு வாங்குவது போன்ற பணிகளைப் பார்த்துக்கொண்டால், ராமமூர்த்தி வாத்திய கோர்வை மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா ஆகிய பணிகளைப் பார்த்துக் கொள்வார். இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. இருவரும் பிரிந்த பின்னர் ராம மூர்த்திக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் மெல்லிசை மன்னர் என்ற பெயரோடு பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார் எம் எஸ் விஸ்வநாதன்.

எம் எஸ் விஸ்வநாதன் எல்லோரிடமும் பண்பாக நடந்துகொள்ளும், எல்லோரையும் அரவணைத்து செல்லும் நபர் என்று பலரும் கூறியுள்ளனர். அதற்கு உதாரணமாக பிரபல இயக்குனர் காரைக்குடி நாராயணன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “எம் எஸ் வி அவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அவர் யாரையும் வாடா போடா என்று சொல்ல மாட்டார். அவர் ஆஃபிஸில் வேலை செய்யும் ஆஃபிஸ் பாயைக் கூட அண்ணா என்றுதான் அழைப்பார். அவரிடம் கணக்கு வழக்குப் பார்த்து வந்த நாராயணன் என்பவரை மட்டும்தான் ‘நாராயணா’ என்று பேர் சொல்லி அழைப்பார்.” எனத் தெரிவித்துள்ளார்.
