ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) மிக நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் (MP) ஆர். தர்மர், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். கடந்த சில காலங்களாக ஓபிஎஸ் அணியில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது அதிகாரப்பூர்வமாகத் தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணியின் தூண்களாகக் கருதப்பட்ட மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் விலகிய நிலையில், தற்போது தர்மரும் இபிஎஸ் பக்கம் சாய்ந்திருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.
தொடர்ச்சியாகத் தனது முக்கியத் தளபதிகள் ஒவ்வொருவராகத் தன்னை விட்டுப் பிரிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருவது ஓ.பன்னீர்செல்வத்தை மிகுந்த மனவேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தனது செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடி வரும் ஓபிஎஸ்-க்கு, எம்பி தர்மரின் இந்த திடீர் விலகல் அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது பிடியை மேலும் பலப்படுத்தி வருகிறார்.
