நான் சொந்த குரலில் டப்பிங் பேசாததற்கு இதுதான் காரணம்… பல ஆண்டு ரகசியத்தைப் பட்டென்று உடைத்த மோகன்!

By vinoth on ஆனி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

   

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.  ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

   

உச்சத்தில் இருந்த மோகனின் மார்க்கெட் விழுந்ததற்கு அவருக்கு டப்பிங் பேசிய எஸ் என் சுரேந்தர்( விஜய்யின் தாய் மாமா) அவரை பிரிந்ததுதான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. இருவருக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலால் அவர்கள் பிரிந்ததாக பல ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. இருவருமே மற்றவரைப் பற்றி பொதுவெளியில் பேசமாட்டார்கள்.

 

இந்நிலையில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சந்தேகத்துக்கு மோகன் இப்போது பதிலளித்துள்ளார். அவரிடம் ஏன் ஆரம்பத்திலேயே நீங்கள் சொந்தக் குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்கப்பட்ட போது “எனக்கு தமிழ் தெரியும் என்றாலும், கர்நாடகா ஸ்லாங்தான் வரும். அது செட்டாகாது. எனக்கு தமிழ் கற்றுக்கொண்டு அதை நானே சரியாக பேசவேண்டுமென்று அப்போது தோன்றவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அதற்கு நான் முயற்சி செய்யவில்லை.

எனக்கு ஆரம்பகாலத்தில் எஸ் வி சேகர் கூட டப்பின் பேசியுள்ளார். ஒரு கட்டத்துக்குப் பின்னர் எனக்கு ஒரு தெளிவு கிடைத்ததும் நானே டப்பிங் பேசத் தொடங்கினேன். கலைஞர் அய்யா சொல்லிதான் முதல் முதலாக பாசப்பறவைகள் படத்தில் என் குரலில் டப்பிங் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.