மதுரைக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக நேற்று மாலை மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அப்போது தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த அக்சய் மார்க்கண்டேயர் என்ற இளைஞர் திடீரென ஸ்டாலின் முன்பாக சர்ச்சையான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்போது அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் என்ன கோஷம் எழுப்பினார்கள் என்று அவரிடம் கேட்டபோது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறார்கள் என்று பேசத் தொடங்கினார். உடனே போலீசார் இளைஞரின் வாயை பொத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த இளைஞர் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜிவி மார்க்கண்டேயர் மகன் அக்சய் மார்க்கண்டேயர் என்பதும் இவர் டெல்லியில் சட்டக் கல்லூரியில் பயின்று வருவதும் தெரிய வந்தது.
