78-ல் வெறும் 3 பேர் தான்… திமுகவின் ரகசிய ரிப்போர்ட்.. லண்டனில் இருந்து வந்ததும் சீட்டுக்களை கலைக்கும் ஸ்டாலின்… விஜய்யை ‘பீட்’ செய்ய களமிறங்கும் திமுக….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

திமுகவில் பட்டியல் சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் (மா.செ) பொறுப்பில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த கட்சித் தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 78 மாவட்டங்களில் திருவள்ளூர் ரமேஷ், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிய 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இது வெறும் 3.8% மட்டுமே என்பதால், தற்போதைய அரசியல் சூழலில் இது கட்சிக்கு அமைப்பு ரீதியான பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியுள்ள சூழலில், பட்டியல் சமூக மக்களின் அங்கீகாரம் குறித்த பிம்பத்தைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் தனது நிழல் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு (20%) வாய்ப்பளித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், விஜய்யின் இந்த அரசியல் வியூகத்தை முறியடித்து, தலித் மக்களின் நம்பிக்கையைப் பெற திமுகவும் ஆட்டத்தை அடித்து ஆடத் தொடங்கியுள்ளது.

   

இதன் முதற்கட்டமாக, திமுகவின் தற்போதைய 78 அமைப்பு மாவட்டங்களை 117 ஆக உயர்த்திப் பிரிக்க கட்சித் தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிரிப்பின் அடிப்படையில், குறைந்தது 20 மாவட்டச் செயலாளர் பொறுப்புகளைப் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்க மு.க.ஸ்டாலின் யோசித்து வருகிறார். அண்மையில் நடந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், இதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் வேகம் பெறும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.