சமூக வலைதளங்கள் மூலம் உருவான காதல், எல்லைகளைத் தாண்டி இரு மனங்களை இணைத்த போதிலும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முன்னால் அது தோல்வியில் முடிந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜிஷன் மிர் என்பவருக்கும், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் துல்வாரி கிராமத்தைச் சேர்ந்த இரும் பானு என்ற இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் வழியாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. மேலும், ஜிஷன் மிர்-ரின் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இரும் பானு வசிக்கும் அதே துல்வாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்ததால், இருவருக்குமான காதல் பந்தம் மேலும் வலுவடைந்தது.
வேலைக்குச் செல்லாமல் இருந்த ஜிஷன் மிர்-ரை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கடிந்து கொண்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இந்தச் சூழ்நிலையில், அவரது காதலி இரும் பானு அவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவிற்கு வந்துவிடுமாறு கூறியுள்ளார். சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருவருக்கும் இருந்ததால், அவர்கள் ஒரு மாற்றுத் திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, எல்லை தாண்டி வந்தவுடன் இந்திய ராணுவத்திடம் சரணடைந்து தங்கள் காதல் விவகாரத்தைக் கூற வேண்டும் என்றும், அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டாலும், தண்டனைக்கு பின் மூதாதையர்களின் கிராமத்தைக் கூறி அங்கேயே தங்கிவிடலாம் என்றும் திட்டமிட்டனர். இதன் மூலம் பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப்படுவதிலிருந்து எளிதாகத் தப்பிக்கலாம் என்றும் அவர்கள் நினைத்தனர்.
தங்கள் திட்டத்தின்படி, கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஜிஷன் மிர் உரி செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தபோது, நம் நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் தனது காதல் விவகாரத்தையும், காதலியுடன் சேர்ந்து போட்ட திட்டம் பற்றியும் ராணுவத்திடம் விவரித்தார். இதையடுத்து, ராணுவம் இரும் பானுவிற்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது, அவரும் ஜிஷன் மிர்-ரை காதலிப்பதையும், தாங்கள் இருவரும் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியதையும் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவம் ஜிஷன் மிர் மீது தீவிர விசாரணை நடத்தியது. அவரது பின்னணியில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமோ அல்லது பாகிஸ்தான் உளவு அமைப்போ இல்லை என்பதும், அவர் முழுக்க முழுக்கத் தனது காதலியுடன் வாழ்வதற்காகவே எல்லை தாண்டினார் என்பதும் விசாரணையில் உறுதியானது. ஆனாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிகளின்படி அவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்க முடியாது என்பதால், ராணுவம் அவருக்கு எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தது. தங்களை இந்தியாவில் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று காதலி இரும் பானு கெஞ்சியபோதிலும், அதற்கு மறுப்புத் தெரிவித்த ராணுவம், ஜிஷன் மிர்-ரை முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
