அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளைத் தங்கள் கண்களாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய மாணவர்களை அன்போடு வரவேற்பதாகக் கூறினார். மேலும், தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரங்களை முறைப்படி கண்காணிக்கச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சரை நேரில் சென்று சந்திப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அதில், “முதலமைச்சர் எங்கு கலந்துகொள்வார், என்ன செய்வார் என்பதை அவருடைய அலுவலகமோ அல்லது அவரே நேரடியாகவோ அறிவிப்பார். இதைத் தவிர்த்து வேறு யார் கூறும் தகவலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று கிடையாது” என்று தெளிவுபடுத்தினார்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்த அமைச்சர், தாம் செய்தியாளர்கள் துறைக்கும் அமைச்சர் என்பதைச் சுட்டிக்காட்டினார். எந்தக் கட்சியினராக இருந்தாலும், அது சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும் பத்திரிகையாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது கட்சி ரீதியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
