சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி – எடப்பாடி சாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாப்பாத்தி காடு அருகே வந்தபோது, எதிரே ஜலகண்டபுரத்திலிருந்து வந்த பால் ஏற்றி வந்த மினி வேன் மீது பைக் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், மினி வேனில் பயணம் செய்த மேச்சேரியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞரும் இந்த மோதலில் உயிரிழந்தார். ஒரே விபத்தில் 3 இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த நங்கவள்ளி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேனில் வந்த ராமகிருஷ்ணன் என்பவர் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
