மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிபின் சி. பாபு, அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜகவின் விசேஷ நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி தனது மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து விலகிச் செல்வதாகவும், தற்போதைய சூழலில் அக்கட்சியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் பிபின் சி. பாபு விமர்சித்துள்ளார். கடந்த சில காலமாகவே மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், இந்த கட்சி மாற்றம் நிகழந்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, இடதுசாரி கோட்டைகளில் இருந்து முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைவது, கேரள அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
