சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் தரக்குறைவாக நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாட்டு முறை அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, பெண் பயணிகளின் தாலியை கழற்றச் சொல்லி வற்புறுத்துவதாகக் கூறப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் தங்கள் சட்டையில் நவீன ‘பாடி ஒர்ன்’ கேமராக்களை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 கேமராக்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மற்ற சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த நவீன கேமராக்கள் சோதனையின் போது நடக்கும் உரையாடல்கள் மற்றும் காட்சிகளை ஆடியோவுடன் துல்லியமாகப் பதிவு செய்யும். இதன் மூலம் அதிகாரிகள் மற்றும் பயணிகள் இடையே ஏதேனும் மோதல் அல்லது தவறான புகார்கள் எழுந்தால், உயர் அதிகாரிகள் அந்தப் பதிவுகளை ஆதாரமாக வைத்து உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடியும். இத்திட்டம் அதிகாரிகளின் நேர்மையை உறுதிப்படுத்துவதோடு, பயணிகளின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க மத்திய நிதி அமைச்சகம் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
