நடிகை ஸ்ரீதேவி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு 1980களில், ஸ்ரீதேவி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினியுடன் அடுத்த வாரிசு, ஜானி, நான் அடிமை இல்லை கமலுடன் 16 வயதினிலே, மூன்றாம்பிறை, வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். கடைசியாக தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் ஸ்ரீதேவி, மகாராணியாக நடித்திருந்தார்.
அந்த காலகட்டத்தில் தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் குறிப்பாக இந்தி படங்களிலும் ஸ்ரீதேவி நடித்தார். அப்போது இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியுடன், அதிக படங்களில் இணைந்து நடித்ததால் ஸ்ரீதேவிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினர். ஆனால் மிதுன் சக்ரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருந்தது.
இதுகுறித்து நடிகை குட்டி பத்மினி ஒரு நேர்காணலில் கூறியதாவது,
மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி லோகிதாம்பாள், மிதுன் சக்ரவர்த்திக்கும் ஸ்ரீதேவிக்கும் உள்ள காதலை தெரிந்துக்கொண்டு மிகவும் அழுது வருந்தினார். அவரும் ஒரு பிரபலமான பெங்காலி நடிகைதான். தன் கணவனுக்காக பெற்றோரை விட்டு, நடிப்பை விட்டுவிட்டு வந்தவர். ஆனால், மிதுன்சக்ரவர்த்தி தன்னை ஏமாற்றி விட்டதால், வேதனைப்பட்ட அவர் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றபட்டார். இப்படி என் வாழ்க்கையை ஸ்ரீதேவி புகுந்து கெடுக்கிறாரே, என அவர் வருந்தாத நாள் இல்லை.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் அம்மா மிதுன்சக்ரவர்த்தியை, அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்தால், உன்னை அவருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறேன். இல்லை என்றால் இதுபற்றி கண்டிப்பாக பேசக்கூடாது என முடிவாக கூறிவிட்டார். இதை ஸ்ரீ தேவி, மிதுன் சக்ரவர்த்தியிடம் கூறிய போது, எந்த காரணத்துக்காகவும் என் மனைவியை நான் விவாகரத்து செய்ய மாட்டேன், என்று அவரும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து, இந்த பிரச்னையில் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் நேரில் சந்திப்பதும் நின்று போனது. படங்களிலும் இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார் குட்டி பத்மினி.