நடிகர் மணிவண்ணன், தமிழ் சினிமாவில் இயக்குநராக சிறந்த படங்களை தந்தவர். நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இயக்குநர் மணிவண்ணன் மூலமாக தான் சத்யராஜ் என்ற சிறந்த நடிகர், தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார் என்றால் அது மிகையல்ல. இயக்குநராக மட்டுமின்றி பல படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்திய அவர், கடந்த 2013ம் ஆண்டில் மணிவண்ணன் காலமானார். அதிகமான மதுப்பழக்கம் கொண்டவர் என்பதால், அதனால் உயிரிழந்தார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் மணிவண்ணனின் உடன் பிறந்த சகோதரி அளித்த நேர்காணலில் அதுபற்றிய பல உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளார்.
எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன் மணிவண்ணன், அக்காக்கள் இருவர் என யாருமே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். எங்கள் வீட்டில் ஒரு சுவாமி படம் கூட இருக்காது. நான் மட்டுமே, பக்கத்து வீட்டு பெண்களுடன் சேர்ந்து கோவிலுக்கு போவேன். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், என் திருமணத்துக்கு பிறகு என் குழந்தைகளுக்கு காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கு எனக்காக, என் குழந்தைகளுக்காக அண்ணன் கோவிலுக்கு வருவார். அவர் குடித்து குடித்து அதனால் உடல்நலம் பாதித்து இறந்துவிட்டதாக பலரும் கூறுவது தவறான தகவல். அவருக்கு 2006ம் ஆண்டில் லிவர் பாதித்துள்ளது என தெரிந்தவுடன் குடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டார்.
அண்ணனுக்கு சுகர், பிபி எதுவுமே இல்லை. முதுகு தண்டுவட பிரச்னைக்காக 3 முறை ஆபரேசன் செய்திருந்தார். அந்த பிரச்னை மட்டும்தான் இருந்தது. திடீரென அண்ணி செங்கமலத்துக்கு கேன்சர் வந்துவிட்டது. இன்னும் சில மாதங்கள்தான் அண்ணி உயிரோடு இருப்பார் என டாக்டர்கள் கூறியதால் அண்ணன் மிகவும் மனமுடைந்து விட்டார். அதனால், பல ஆண்டுகளாக குடிக்காமல் இருந்த அவர் அந்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து குடித்தார். தாங்க முடியாத வேதனை என்பதால் யாரும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்த 2மாதங்களில் அண்ணியும் இறந்துவிட்டார் என்று மணிவண்ணனின் சகோதரி கூறியிருக்கிறார்.