தமிழ் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, நள்ளிரவில் தனது குழுவினருடன் கேரளா நோக்கி காரில் புறப்பட்டார் மம்முட்டி. மேலூர் வழியில் சாலை பணிகள் நடைபெற்று வந்ததால், கூகுள் மேப் வழிகாட்டுதலிலும் தடுமாறி, அதிகாலை 3.30 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியில் வழி தெரியாமல் அவர்கள் சிக்கித் தவித்தனர். அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்கில் இருந்த இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளனர்.
சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அந்த இளைஞர், சற்றும் தயங்காமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு மம்முட்டி அண்ட் டீமை பின் தொடருமாறு கூறி, சுமார் 10 கிலோமீட்டருக்கும் மேல் முன்னால் சென்று மெயின் ரோட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டியுள்ளார். ‘இனி நேராகச் சென்றால் கேரளா போய்விடலாம்’ என்று அவர் வழியனுப்பியபோது, நெகிழ்ந்துபோன நடிகர் மம்முட்டி அந்த இளைஞரைக் கட்டிப்பிடித்து தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், தனக்கு உதவிய அந்த இளைஞரின் பெயர் பாண்டியன் என்றும், அவர் எனது நண்பன் என்றும் மம்முட்டி நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/oneindianews?ref=embed_video
மலையாள திரைப்படங்களில் பல நேரங்களில் தமிழர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களிலோ அல்லது வில்லன்களாகவோ சித்தரிக்கப்படும் போக்கு விமர்சனத்திற்குள்ளாவது உண்டு. ஆனால், நள்ளிரவில் திசை தெரியாமல் தவித்த ஒட்டுமொத்த மலையாள திரையுலகத்தின் மாபெரும் கலைஞருக்கு, எந்த எதிர்பார்ப்புமின்றி உதவியதன் மூலம் தமிழர்களின் விருந்தோம்பலையும் மனிதநேயத்தையும் பாண்டியன் மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்குப் பிறகாவது, மலையாள சினிமாவில் தமிழர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் சித்தரிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலக ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
