நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் கட்சித் தொடங்கிய போது ஆளும்கட்சியாக இருந்த திமுக, அவரது தேர்தல் பிரச்சாரத்திற்குப் பல இடங்களில் முட்டுக் கட்டை போட்டதாகவும், அனுமதி மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதன்காரணமாக பல தொகுதிகளில் விஜய்யால் நேரடியாகப் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது. இருப்பினும், அவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையால், முதல்முறை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை 35 சதவீத மக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவின் மூலம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெகவின் தலைவராக, விஜய்யும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார்.
இந்நிலையில், தவெகவின் இந்த வெற்றி குறித்துப் பிரபல நடிகரும், நீண்டகாலமாகவே திமுகவில் இருந்தவருமான தியாகு ஊடகங்களில் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான தியாகு பேசுகையில், “நடந்த தேர்தலில் தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால், நியாயமாகப் பார்த்தால் 200 இடங்களுக்கும் மேல் கிடைத்திருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சாரக் களத்தில் மட்டுமின்றி, தேர்தல் நாளன்றும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக அவர் திடுக்கிடும் குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.
குறிப்பாக தேர்தல் நாளன்று, விஜய்க்கு வாக்களிக்கச் செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களைத் தடுக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் சுமார் 100 பேருந்துகள் இயங்கவிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தியாகு தெரிவித்துள்ளார். அந்தப் பேருந்துகளில் பயணிக்க இருந்த மக்கள் அனைவரும் தவெகவுக்கு வாக்களிக்கச் செல்லவிருந்தவர்களே என்றும், அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவது திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒருவேளை அந்த மக்களும் தடைகளின்றி வாக்களித்திருந்தால், தம்பி விஜய் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருப்பார் எனத் தியாகு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
