மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார் மம்மூட்டி. குறிப்பாக தமிழில் இவர் நடித்த “மௌனம் சம்மதம்”, “அழகன்”, “தளபதி”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தமிழில் மம்மூட்டி நடித்ததில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றித் திரைப்படம் “ஆனந்தம்”.
இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குடும்பத் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
“லிங்குசாமி என்னை ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் எனக்கு மம்மூட்டியுடன் நடிப்பதற்கு பயமாக இருந்தது. சரியாக நடிக்கவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கண்டபடி திட்டிவிடுவார். அதன் பின் தயாரிப்பாளர் சௌத்ரி என்னை அழைத்து, தைரியமாக நடி என்று கூறினார். முதல் நாள் படப்பிடிப்பில் லிங்குசாமியிடம் திருடன் கதாபாத்திரத்திற்கு யார் நடிக்கிறார் என்று மம்மூட்டி கேட்டார்.
அதற்கு லிங்குசாமி, எந்த காமெடி நடிகரின் டேட்டும் கிடைக்கவில்லை. அதனால் பாவா லட்சுமணனை நடிக்க வைக்கலாம் என்று கூறினார். அதற்கு மம்மூட்டி ‘இவனை பார்த்தா பன்னிக்குட்டி மாதிரி இருக்குறான். பசி வந்த மாதிரியா இருக்கிறான்’ என்று கேட்டார். அதன் பின் என்னுடைய நடிப்பை பார்த்து மம்மூட்டி மிகவும் பாராட்டினார். ‘நீ இனிமே மேனேஜர் வேலை பார்க்காத, நடிகனா ஆகிடு’ என்று மம்மூட்டி கூறினார். அதில் இருந்து நடிகனாக ஆகிவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
பாவா லட்சுமணன் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக இருந்தவர். அதன் பின் பல சினிமாக்களில் வடிவேலுவுடன் பல நகைச்சுவைக் காட்சிகள் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.