திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் காரசாரமாகப் பேசிய மல்லை சத்யா, “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவுக்காகத் தனது வாழ்நாளில் மிகப்பெரிய அரசியல் பிழையைச் செய்துவிட்டார். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் சிங்கமாகவும் போர்வாளாகவும் பார்க்கப்பட்ட வைகோ, இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ரசிகர் மன்ற தளபதி போல் மாறிப்போயுள்ளார். மக்கள் இன்று அவரை ஒரு நகைச்சுவை நடிகரைப் போலத்தான் பார்க்கிறார்கள். அவரது நிலையைப் பார்த்து நாங்கள் பரிதாபப்படுகிறோம்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், “என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான உண்மையான தொண்டர்களை இழந்துவிட்டு வைகோ இன்று தனி மரமாக நிற்கிறார்” எனத் தெரிவித்த மல்லை சத்யா, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட வெற்றி கழகம் திமுகவுக்கு முழு ஆதரவளிக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வைகோவைக் கிழித்தெறியும் வகையில் மல்லை சத்யா பேசிய இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
