திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து வராமல் நேரடியாகத் தேர்வுக்கு மட்டும் வந்த பிளஸ்-2 மாணவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது “ஏன் பள்ளிக்குச் சரியாக வரவில்லை?” எனக் கேட்டதால் ஆத்திரமடைந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர், திடீரெனத் தலைமை ஆசிரியரின் அறைக்குள் புகுந்து அவர் மீது கொடூரமாகப் பாய்ந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். மாணவர்களின் வெறிபிடித்த தாக்குதலில் தலைமை ஆசிரியரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்டச் சட்டை முழுவதும் ரத்தக்கறையானது. தலைமை ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பறை ஆசிரியர் ஓடி வந்ததைக் கண்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலிஸார் பள்ளியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர்களைப் பிடித்துத் தனித்தனியாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வகுப்பறைக்குள்ளேயே தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் நடத்திய இந்த ரத்தக் களறித் தாக்குதல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
