மதுரை பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள், நிலுவையில் உள்ள கடன் தவணைத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்றும், கடன் தள்ளுபடி அமலுக்கு வந்த பிறகு அவர்கள் செலுத்திய தொகை மீண்டும் அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுச் சங்கம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அரசு அறிவித்த ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளும் குளறுபடிகளும் நிலவுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தங்களை மீண்டும் பணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்துவது கடன் தள்ளுபடி அறிவிப்பின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த குழப்பமான நடவடிக்கைகளால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறும் விவசாயிகள், கூட்டுறவுத் துறை உடனடியாகத் தலையிட்டு முறையான விளக்கமளிப்பதோடு, விவசாயிகளை அலைக்கழிக்காமல் பயிர்க்கடன் தள்ளுபடியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
