தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயல்திறன் இல்லை எனில் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த பத்து நாட்களில் மட்டும் நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து ஆறு முதியவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் குற்றச் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி உளவுத்துறையின் தோல்வியையும் காவல் துறையின் மெத்தனப் போக்கையும் விமர்சித்துள்ள அவர், பொதுவெளியில் குடும்பத்துடன் அச்சமின்றி வெளியே சென்று வர முடியாத சூழலில்தான் இன்று தமிழக மக்கள் தவித்து வருவதாகவும் தனது அடுக்கடுக்கான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார்.
