இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுக் குடும்பம், கல்லீரல் செயலிழந்த தங்களது குடும்ப உறுப்பினருக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் டெல்லியில் உள்ள சாக்கெட் மேக்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்தது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இரத்தக் குழுக்கள் பொருந்தி, அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து, அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களே இருந்தன. வியாழக்கிழமை நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு முதல் நாள் புதன்கிழமை அவர்கள் தங்கியிருந்த டெல்லி மாளவியா நகர் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி, அவருக்குக் கல்லீரல் வழங்கவிருந்த கொடையாளி மற்றும் அவர்களைப் பராமரிக்க வந்த உதவியாளர் ஆகிய மூன்று பேரும் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொடூர விபத்திற்கு ஹோட்டல் உரிமையாளரின் பேராசையும், அதிகாரிகளின் அலட்சியப்போக்குமே முக்கியக் காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்’ (Bed and Breakfast) கொள்கையின் கீழ் வெறும் 6 அறைகள் மட்டுமே நடத்துவதற்கு உரிமம் பெற்றிருந்த ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ், டெல்லியில் “எல்லாம் செல்லும்” என்ற அலட்சிய எண்ணத்தில் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, சட்டவிரோதமாக 25 அறைகளைக் கட்டியுள்ளார். இந்த விதிமீறல்களை உள்ளூர் நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்ததன் விளைவாக, பர்மிங்காம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 21 இந்த தீ விபத்தில் தங்களது உயிரை இழக்க நேரிட்டது.
ஒரு புதிய விடியலை நோக்கிப் பிரார்த்தனைகளுடன் காத்திருந்த குடும்பத்தில், தற்போது மரண ஓலம் மட்டுமே எஞ்சியுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களும் எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனித உயிர்களுடன் விளையாடி, சட்டவிரோதக் கட்டுமானங்களுக்குக் காரணமானவர்கள் மீதும், இதற்குத் துணை நின்ற அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
