மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர் சி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் சுந்தர் சி-க்கும் இடையே தொகுதியின் வளர்ச்சி குறித்த காரசாரமான விவாதங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், குஷ்புவின் இந்த திடீர் புகார் அதிமுக தலைமையைத் திடுக்கிடச் செய்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்ட குஷ்பு, களத்தில் அதிமுகவினர் தங்களுக்குச் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், தேர்தல் செலவுகளுக்காகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, களப்பணியில் காட்டவில்லை என்றும், தொகுதிக்குள் அதிமுகவினர் இரண்டு மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்து கிடப்பதால் பிரச்சாரப் பணிகளில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய குஷ்பு, ஒரு குழுவினர் கொடுக்கும் நேரத்திற்குத் தாங்கள் சென்றால், மற்றொரு குழுவினர் வேண்டுமென்றே வராமல் தாமதப்படுத்துவதாகவும், “அவர்கள் சொன்னால் அவர்களிடமே செல்லுங்கள்” என்று அலட்சியமாகப் பேசுவதாகவும் புலம்பியுள்ளார். இத்தகைய உள்ளடி வேலைகளால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதாகவும், ஒருவேளை அதிமுகவினரை திமுக தரப்பினர் தங்கள் பக்கம் வளைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வெளிப்படையாகவே முறையிட்டுள்ளார்.
குஷ்புவின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்துள்ளார். வேட்பாளர் சுந்தர் சி-யாக இருந்தாலும், அங்குப் போட்டியிடுவது அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் என்பதை நிர்வாகிகள் உணர வேண்டும் என்றும், கோஷ்டி பூசல்களை உடனடியாகக் களைந்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் கௌரவம் அடங்கியிருப்பதால், இதில் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.பி. உதயகுமாருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
