கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக, மூன்று ஆண்டுகள் கனடாவில் போராடிவிட்டு சமீபத்தில் இந்தியா திரும்பிய ஜோதி அட்னானி என்ற இளம்பெண்ணின் சமூக வலைதளப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2022-ல் கனடாவுக்குச் சென்றபோது, அங்கேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என்பதே அவரது ஒரே லட்சியமாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே அந்த உற்சாகம் மறைந்து, பிழைப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் கனடாவின் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் புலம்பெயர்ந்தோரை வெகுவாகப் பாதித்துள்ளன. குறிப்பாக, விண்ணைத் தொடும் வாழ்க்கைச் செலவு, குறைந்து வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் போன்றவை ஜோதி போன்ற பலரை “கனவு காண்பதை விட உயிர் வாழ்வதே கடினம்” என்ற நிலைக்குத் தள்ளியுள்ளன. இவற்றுடன் கல்விக்கான கடன் சுமையும் சேர, எதிர்காலம் குறித்த பயம் அவரிடம் மேலோங்கியது.
இருப்பினும், ஜோதியின் வாழ்க்கையில் “பிரேகிங் பாயிண்ட்” ஆக அமைந்தது அவரது உடல்நலப் பாதிப்புதான். கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், ஒரு மருத்துவரைச் சந்திப்பதற்குக் கூட நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் அங்குள்ளது. உடல்நலம் குன்றிய நேரத்தில் முறையான சிகிச்சை பெற முடியாமல் போனது அவரது மனநலம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. காசு கொடுத்தாலும் சரியான நேரத்தில் மருத்துவச் சேவை கிடைக்காத விரக்தியே, அந்த நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அவரை எடுக்கத் தூண்டியது.
தற்போது தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள ஜோதி, கனடா தனக்கு வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கக் கற்றுக்கொடுத்ததாகக் கூறுகிறார். தனது லிங்க்ட்இன் பக்கத்தில் “வேலை செய்யும் இடம் கனடா” என்பதை இந்தியா என மாற்றிய அவர், வெளிநாட்டு கனவுகளுடன் செல்பவர்கள் அங்கிருக்கும் எதார்த்த சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார். இந்திய இளைஞர்களுக்குப் பாடமாக அமைந்துள்ள இவரது பதிவு, வெளிநாடுகளில் குடியேறுவது என்பது வெறும் வசதியான வாழ்க்கை மட்டுமல்ல, அதற்கப்பால் உள்ள போராட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை உணர்த்துகிறது.
