தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதால் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்கும், விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக மக்களுக்கு புதிய விடியலை தரவும் காத்துக்கொண்டிருக்கிறார்.
அதேசமயம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மற்றும் பாபநாசம் ஒன்றிய குழு செயலாளராக இருந்த சரவண பாபு 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டார். திமுகவின் கோட்டையாக இருக்கும் தஞ்சையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரும் கூண்டோடு விலகி திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமான நிலையில் இந்த புதிய இணைப்பை நாங்களும் செய்வோம் என நாம் தமிழர் கட்சியினர் செய்து காட்டியுள்ளனர்.
