தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதால் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்கும், விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக மக்களுக்கு புதிய விடியலை தரவும் காத்துக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே பாமக இடையே கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் கட்சி இரண்டாக பிளவுப்பட்டு கிடக்கிறது. கூட்டணி குறித்த முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பாமகவில் இன்னும் அப்பா மகன் மோதல் முடிவுக்கு வராததால் எந்த கூட்டணியில் அக்கட்சி சேரப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெறும் எனவும், கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கட்சி சின்னம் நம்மிடம் உள்ளதால் நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
