கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. அதே சமயம் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு மன்னிப்பு கேட்டு விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனிடையே கரூர் கூட்ட நெரிசலுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் துயரமானது, நினைத்துக் கூட பார்க்க முடியாதது. யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் முயற்சி எடுக்க வேண்டும். கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயரத்தில் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தம்பியும் உயிரிழந்துள்ளார் எனக் கூறிய செந்தில் பாலாஜி, யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். மேலும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்டம் அதிக அளவில் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
